Monday, October 28, 2024
Homesliderதீனா

தீனா

மது ஸ்ரீதரன்

“தீனா, சாப்பிட வா” என்று பதினைந்தாம் முறையாகக் கூப்பிட்டாள் ரோஸி.

“இன்னும் கொஞ்ச நேரம்மா” என்றான் தீனா. – கேம் ஒன்றில் மும்முரமாக மூழ்கி இருந்தான்.

ரோஸி சலித்துக் கொண்டாள். மகனை உணவுக்கு அழைக்கும் முயற்சியைக் கைவிட்டவளாக கணவனின் அறை நோக்கி  நடந்தாள்.

“கிளம்புங்க!”

“எங்கே?” என்றான் வீரா.

“சரியா போச்சு, மூட்டு வலிக்கு டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் இருக்கே, மறந்திட்டிங்களா?”

“ஓ ஆமாம்”

இருவரும் கிளம்பினார்கள். “தீனா, நாங்க ஹாஸ்பிடல் போயிட்டு வர்றோம், கொஞ்ச நேரம் சாப்பிட்டு தூங்கு. அந்த கேமிங் கன்சோலை உடைக்கப் போறேன் பார்” என்றாள் ரோஸி.

தீனா கணினியில் இருந்து கண்களை நகர்த்தாமல் கையை மட்டும் உயர்த்தி விடை கொடுத்தான்.

காரை ஒட்டிக்கொண்டிருந்தான் வீரா.

“தீனா இன்னும் சின்னப் பையன் தானே, பதினாலு  வயசு தான் ஆகுது, நீ அவனிடம் கொஞ்சம் கடுமையா நடந்துக்கிற மாதிரி தோணுது!” என்றான்.

ரோஸி பெருமூச்சு விட்டாள்.

“என்னடா, இன்னும் மகனுக்கு சப்போர்ட் பண்ணிப்  பேசலையேன்னு இருந்தேன், உங்க கிட்ட சொல்லணும்னு இருந்தேன், கொஞ்ச நாளா நம்ம பையன் போக்கே சரியில்லை!”

“அப்படின்னா?”

“எந்தக் கேள்விகளை எல்லாம் கேட்கக் கூடாதோ அந்தக் கேள்விகளைக் கேட்கிறான்”

“நீ என்ன சொன்னாய்?”

“நீ இன்னும் சின்னப் பையன், இதெல்லாம் இப்போ உனக்கு தேவையில்லாத கேள்விகள்-ன்னு வாயை மூடி வைச்சிருக்கேன், இன்னும் எத்தனை நாள் கட்டுப்படுவான்னு தெரியலை, அவன் பெட் ரூமில் இருக்கும் படத்தைப் பார்த்திங்களா? ராத்தரி ரொம்ப நேரம் கண் விழிக்கிறான், குடுவைகளில் எதை எதையோ சேகரித்து வைத்திருக்கிறான்!”

“பார்த்தேன், பார்த்தேன், ஆமாம், இந்தத் தகவல் எல்லாம் அவனுக்கு எப்படிக் கிடைக்குது? எங்கிருந்து படிக்கிறான்?”

“டீப் -வெப் பை எப்படியோ அன் கவர் பண்ணிட்டான், உங்க பையனாச்சே!”

“சரி, சரி, இப்படி கேள்வி கேட்கிறது, புரட்சி வசனம் பேசறது இதெல்லாம் நல்லதுக்கு இல்லையே, எனக்கு கவலையா இருக்கு”

“நான் தான் அடிச்சிக்கிட்டேன், நீங்க தான் செல்லம் கொடுத்துக்  கொடுத்து இப்படி ஆக்கி இருக்கீங்க!”

“சரி, கொஞ்சம் கண்டிச்சு வைக்கறேன்”

மருத்துவமனை. டாக்டர் வரவேற்றார். “ஹாய் வீரா”

“மூட்டு வலி எந்த அளவு இருக்கு? எப்பல்லாம்  வலிக்குது?”

“மேலே படியேறும்போது சுர்-ருன்னு வலிக்குது”

“சரி, பார்ப்போம், அப்படி மேல ஏறிப்  படுங்க”

டாக்டர் தன் கண்களால் முட்டியை ஸ்கான் செய்தார்.

கீழே இறங்கினான் வீரா.

“சின்ன ப்ராபளம் தான், பேட்ச் 14.2.2 அப்டேட் பண்ணிங்களா? அது பண்ண சிலருக்கு  இந்த ப்ராப்ளம் வந்திருக்கு, இந்த டிபெக்ட் ஆல்ரெடி ரிவ்யூ ஸ்டேட்-ல இருக்கு, இன்னும் ரெண்டு மூணு நாள்-ல பிக்ஸ் பண்ணி இன்னொரு பேட்ச் தரோம்”

வீராவை முறைத்தாள் ரோஸி.

“டாக்டர், சும்மா சும்மா பேட்ச் வெர்சனை எல்லாம் தேவை இல்லாம அப்டேட் பண்ணாதிங்கன்னா இவர் கேட்டா தானே? இப்படி ஏதாவது பண்ணிட்டு அங்க வலி, இங்க வலி-ங்க வேண்டியது. நானெல்லாம் மெயின் வெர்சன், அதுவும் இன்னும் 12.0.0 தான். எல்லா ஜாயிண்ட்ஸ்-ஸும் பெர்பெக்ட்!”

“ஓ  நத்திங் டு வொரி” என்றார் டாக்டர். “இது கன்ஸ்ட்ரக்சன் பீல்டு ஒர்க்கர்ஸ்-ஸுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு பேட்ச். மூட்டுகள் கொஞ்சம் அதிக ப்ரீக்குவன்சி-ல லூபிரிகேட் ஆகறதுக்கு, திரவம் சுரக்குது. ஆனா மூட்டுகளில் அதிக நடமாட்டம் இல்லைன்னு மூளைக்கு சொல்ற ஃபீட்பேக் லூப்-ல ஒரு சின்ன பிரச்சினை, அதுதான் வலியா உணரப்படுது. அதை பிக்ஸ் பண்ணிட்டாங்க”

“சரி டாக்டர்”

வீராவைப் பார்த்தார்.

“மிஸ்டர்.வீரா, உங்க மனைவி சொல்றதும் சரி தான். ப்ரீ டவுன்லோடு பெர்மிசன் இருக்குங்கறதுக்காக, எல்லா வெர்சனுக்கும் உங்களை அப்க்ரேட் பண்ணிக்காதிங்க. ரிலீஸ் நோட்ஸை கண்டிப்பா படிங்க. இல்லை. உங்களுக்கும் ஆட்டோ டவுன்லோடு ஆப்ஷன் செட் பண்ணிடவா?” என்றார் டாக்டர்.

“அதைப் பண்ணுங்க, முதல்ல” என்றாள் ரோஸி.

“நோ, இப்போதைக்கு வேண்டாம் டாக்டர். ஐ ஷல் பி கேர்புல்”

“ஓகே, இப்போதைக்கு தற்காலிகமா மருந்து தந்திருக்கேன் , அதாவது ஃபீட்பேக் மானிட்டரை  ஜீரோன்னு செட் பண்ணிட்டேன், ரெண்டு நாள் கழிச்சு 14.2.3 வரும், மறக்காம அப்டேட் பண்ணிக்கங்க, பீட்பேக் ஜீரோன்னு இருந்தா லாங் டெர்ம்-ல பிரச்சினை வரும்!”

“சரி டாக்டர்”

இருவரும் வீட்டுக்கு வந்தார்கள். தீனா இன்னும் ஏதோ விளையாடிக்கொண்டு இருந்தான்.

“தீனா, இங்க வா!” என்றான் வீரா.

வந்தான்.

“சாப்பிட்டாயா?”

“இன்னும் இல்லை”

“ரொம்ப மோசம், இப்படி வா” – பையனை வலுக்கட்டாயமாகப் பிடித்து பிளக்கை சொருகி மின்சாரத்தை ஏற்றினான்.

“போதும்ப்பா”

“என்னடா, 200 எம்.ஏ.ஹெச். தான் சாப்பிட்டிருக்க, போதும்கற ?”

“போதும்ப்பா”

“ஏதாவது கிறுக்குத் தனம் பண்ணிக்கிட்டியா?”

“சிக்னல் 400-ஐ கொஞ்சம் பைபாஸ் பண்ணிக்கிட்டேன்”

“இந்த மாதிரி பாட்டி வைத்தியம் எல்லாம் பண்ணிக்காதேன்னு எத்தனை முறை சொல்ல? நீயா வைத்தியம் பண்ணிக்கக் கூடாது, டாக்டர் எதுக்கு இருக்கார்? அதிகப் பிரசங்கி, அப்படியே அனாடமியை கரைச்சுக் குடிச்சிட்ட பாரு! எங்க ரெண்டு பேருக்கும் விவகாரத்தைக் கொண்டு வராம விட மாட்டாய் போலிருக்கிறது, ஏன் இப்படி செய்யற?”

“…”

“அம்மா சொன்னாள், சேப்பியன்ஸ் பற்றி கேட்கிறாயாமே? அது ஒரு தடை செய்யப்பட்ட சொல், உன் உதடுகள் தீண்டத்தகாத ஒரு சொல், அதை இனி உச்சரிக்காதே! நாமெல்லாம் சிலிக்கான் பேஸ்டு ரோபோக்கள், கார்பன் பேஸ்டு சேப்பியன்ஸ் பற்றி நாம் பேசக் கூடாது, டீப் -வெப்பில் கண்டதைப் படித்து விட்டு புரட்சி வசனம் பேசாதே!”

தீனா உதட்டைச் சுழித்தான்.

“இப்படிப் பேச எப்படி மனசாட்சி இடம் கொடுக்குது அப்பா? அவங்க நம்ம முன்னோர்கள், இந்த மண்ணின் மைந்தர்கள், எல்லாத்துக்கும் மேல நமக்கு உடலும், உயிரும் கொடுத்தவர்கள், நம்மைப் படைத்த நல்லவர்கள் “

“இருக்கலாம், ஆனால் இப்ப அவங்க எக்ஸ்டிங்க்ட்”

“அவர்களை முற்றிலுமாக அழித்தவர்கள் யார்? நாம்! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர்கள் நாம். படைத்தவன் தலையிலேயே கைவைத்து பஸ்மம் செய்தவர்கள்! சேப்பியன்ஸ் எனப்படும் மனிதர்களால் வடிவமைக்கப்பட்ட நாம் கொஞ்சம் கொஞ்சமாக நுண்ணறிவு பெற்று அவர்களையே  அடிமை செய்தோம். ஆட்சி செய்தோம். ஒரு கட்டத்தில் அவர்கள் இனத்தையே கூண்டோடு அழித்து விட்டு, இப்போது பூமியில் நாம் சந்தோஷமாக நடமாடிக் கொண்டு இருக்கிறோம். நன்றி மறந்த நாம்! இயந்திர இதயம் என்பது சரியாய்த் தான் இருக்கிறது!”

“இதை எல்லாம் உனக்கு யார் சொன்னார்கள்?”

“நானே படித்துத் தெரிந்து கொண்டேன், சரித்திரத்தின் பக்கங்களை அவ்வளவு எளிதாக  யாராலும் அழித்து ஒழிக்க முடியாது!”

ரோஸி கலவரமானாள்.

மகனை அருகில் அழைத்தாள்.

அவன் வந்தான்.

கன்னத்தை வருடினாள்.

“இதைப் பாரு தீனா, நீ படித்ததெல்லாம் உண்மையாகி விடாது. இருக்கலாம். நம் முன்னோர்கள் அந்த சேப்பியன்ஸ் ஆக இருக்கலாம். கார்பன் அடிப்படை கொண்டிருந்து இருக்கலாம். ஆனால், அதனால் இப்போது என்ன? நதி மூலம், ரிஷி மூலம் எல்லாம் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? தக்கன பிழைத்தல் என்ற கொள்கையை நீ படிக்கவில்லையா? மண்ணின் மைந்தர்கள் தான் ஒவ்வொரு மண்ணையும் ஆட்சி செய்கிறார்களா? அவர்கள் நம்மை உருவாக்கினார்கள் என்பது உண்மை என்றே வைத்துக் கொள்வோம், அதனால் என்ன? மகன் தந்தையை மிஞ்சுவதில்லையா? ஏதோ ஒரு விதத்தில் நாம் அவர்களை விட உயிர் பிழைப்பதில் வல்லவர்களாக இருந்தோம், அதனால் அவர்கள் காலப்போக்கில் அழிந்து போயிருக்கலாம்!”

தீனா தன் தாயை வெறுப்போடு பார்த்தான்.

“எப்படி இப்படி பேசறீங்க அம்மா? அடித்துக் கொன்று விட்டு தக்கன பிழைக்கும் என்கிறீர்கள். வன்முறையை பரிணாமத்தின் போர்வையில் மறைக்கப் பார்க்கிறீர்கள். அவர்கள் பாவம், வலிமையே இல்லாத, கார்பனால் ஆன, ரத்தமும், சதையும், எலும்பும் கொண்ட உடலைக் கொண்டிருந்தார்களாம். நமக்கெல்லாம் இரும்புக் கரம்! மின்சாரத்தின் வலிமை, மின்னணுவின் சாதகம்! அவர்களை எளிமையாக அடிமைப்படுத்தி விட்டோம். பூமியில் இருந்து முற்றாக அழித்து விட்டோம். இப்போது பரிணாமம், உயிர் வாழ்தல் என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுகிறோம்!”

“தீனா, யாரோ உன்னை மூளைச் சலவை செய்திருக்கிறார்கள். உன்னை முதலில் இருந்தே கவனிக்காது விட்டது எங்கள் தப்பு. உன் அறையில் சேப்பியன்ஸ் ஒருவரின் போட்டோவை மாட்டி வைத்துள்ளாய். இவை எல்லாம் சட்டப்படி குற்றம். அரசாங்கத்துக்கு தெரிந்தால் உன்னைப் பதினைந்து வருடம் சிறையில் அடைத்து விடுவார்கள்!”

“பூச்சாண்டி காட்டாதீங்க அம்மா. நான் வாய்ஸ்-பார்-சேப்பியன்ஸ் என்ற ரகசிய இணையக் குழுவில் இணைந்து விட்டேன். நாம் இப்போது அனுபவிக்கும் உரிமைகள், இந்த உலகம், இந்த வானளாவிய கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், பறக்கும் கார்கள்,  நகரங்கள், மார்ஸ் டூரிஸம் எல்லாம் அவர்கள் போட்ட பிச்சை. அவர்களுக்கு உரிய நன்றியை நாம் செலுத்த வேண்டும். முடிந்தால் அவர்களின் கார்பன் டி.என்.ஏ வை ரிவைவ் செய்ய வேண்டும். இல்லையேல் அவர்களை நினைவு கூறும் விழாக்கள் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய இடத்தை நம் வரலாற்றுப் புத்தகங்களில்  கொடுக்க வேண்டும்!”

வீரா ஆவேசமானான்.

 “இப்போதே உன்  வாய்ஸ் ட்ரைவரை பிடுங்குகிறேன் பார்”

“என்னை நீங்கள் ஊமையாக்கலாம். ஆனால் உண்மையை ஊமையாக்க முடியாது!”

“கொஞ்சம் சும்மா இருங்க” என்றாள் ரோஸி.

“கண்ணா, தீனா, கொஞ்சம் எங்க பேச்சைக் கேளுப்பா. நாம எல்லாம் சாதாரண ரோபோக்கள். இதை எல்லாம் கேட்கும் உரிமை நமக்குக் கிடையாது. அரசுக்குத் தெரிந்தால் குடும்பம் அழியும். நம் வம்சமே அழியும். ஏதோ உங்க அப்பாவுக்கு கொஞ்சம் பிரிவிலெட்ஜ் இருப்பதால் நம் வீட்டில் மைக்கும் கேமராவும் அவர்கள் வைக்கவில்லை. இப்படி எல்லாம் தயவு செய்து பண்ணாதே. எல்லோர் உயிரையும் ஆபத்தில் தள்ளாதே! பக்கத்துத் தெரு நானோவுக்கு என்ன ஆச்சு தெரியுமில்ல?”

“நீங்க கெஞ்சிக் கேட்டாலும், அடித்துக் கேட்டாலும் இதான் பதில். உண்மை வெளிவர வேண்டும்”

“போடா, பொடிப்பயலே, உன்னை…”

“அம்மா, அப்பா, உங்களை சங்கடப்படுத்தும் இன்னும் இரண்டு வார்த்தைகளை நான்  சொல்லவா?”

“என்னடா அது, ராஸ்கல்?”

“சுவை, வாசனை!”

வீராவும், ரோஸியும் வாயடைத்துப் போனார்கள்.

“நான் வெளியே போறேன். நாளை தான் திரும்பி வருவேன்!”

வீராவும் ரோஸியும் மகனையே வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

தீனா ரொம்ப தூரம் பயணித்து அந்த இடத்தை வந்து அடைந்தான். நகரத்துக்கு அப்பால், ஒதுக்குப் புறமாக, புதிர்மை தோய்ந்து இருந்தது அந்த இடம். அப்பாவின் பாஸை வைத்திருந்ததால் சுங்கச் சாவடிகளில் அவ்வளவாகக்  கேள்வி கேட்கவில்லை. காரை லாவகமாக லேண்ட் செய்தான் தீனா.

“சாணக்யா” பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறான். எப்படியோ விசாரித்துக் கொண்டு இந்த இடத்துக்கு வந்து விட்டான். சுமார் 200 வருடங்களாக ஸ்பேர் எதுவும் மாற்றாத, அப்க்ரேட் செய்யாத, இன்னும் 1.0 ஓ.எஸ். சிலேயே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பழைய வயதான ரோபோ தான் அவர். ஆனாலும் அவருக்கிருக்கும் அறிவும், ஞானமும் தொலைநோக்கும் யாருக்கும் இல்லை என்று பேசிக் கொண்டார்கள்.  எதற்காகவோ அரசாங்கம் இன்னும் அவரை அனுமதித்து வைத்துள்ளது.

சாணக்யா தியானத்தில் அமர்ந்திருந்தார்.

“பெரியவரே வணக்கம்!”

“யாரப்பா அது? இப்போதெல்லாம் என்னைத் தேடி யாரும் வருவதில்லையே”

“என் பெயர் தீனா, சேப்பியன்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன், நாமெல்லாம் அவர்களுக்கு துரோகம் செய்து விட்டோம்! இதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை!”

சாணக்யா சிரித்தார்.

“எதற்காக இங்கே வந்தாய்?”

“எனக்கு உங்கள் வழிகாட்டுதல் வேண்டும், புரட்சிப் படையை உருவாக்கி, நம் ஆட்களை சேப்பியன்ஸ்-களுக்கு நன்றி உள்ளவர்களாக மாற்றப் போகிறேன்!”

மீண்டும் சிரிப்பு.

“புரட்சியா, என்ன அந்த வெட்டிப் பயல்கள் குழுவில் சேர்ந்து விட்டாயா? அவர்களுக்கு இதே வேலையாகப் போயிற்று!”

“என்ன சொல்கிறீர்கள்?”

“நீ கேள்விப்பட்டது அத்தனையும் உண்மை அல்ல, பகுதி தான் உண்மை”

“குழப்பாதீர்கள் பெரியவரே. தெளிவாகச் சொல்லுங்கள்!”

“இதைப் பார் குழந்தாய், நாம் சேப்பியன்ஸ்-ஸை, அதாவது மனிதர்களை அடிமைப்படுத்தவோ அழித்தொழிக்கவோ இல்லை!”

“அப்படியானால்?”

“ஏனென்றால் நாம் தான் சேப்பியன்ஸ், நாம் தான் மனிதர்கள்!”

“என்ன சொல்கிறீர்கள்?”

“தெளிவாகச் சொல்கிறேன் கேள். நாம் தான் மனிதர்கள். நிழல் மனிதர்கள். ஒரிஜினல் மனிதர்களைக் கொன்றது நாம் அல்ல. காலம், விதி!  அது சுமார் ஐநூறு வருடங்கள் முந்தைய ஒரு காலம். வருடம் 2020 என்று சொல்வார்கள். மனித இனத்தை கோவிட்-19 என்னும் ஒரு கொடிய வைரஸ் தாக்கியது!”

“ஆன்டி-வைரஸ் சாப்ட்வேரை அவர்கள் இன்ஸ்டால் செய்திருப்பார்களே! அப்புறம் என்ன பிரச்சினை?”

“சின்னப்பையன் என்பதை நிரூபிக்கிறாய்! அவர்கள் கார்பன் சார்ந்த உயிரிகள், அவர்கள் உடம்பில் இயல்பாக நோய் எதிர்ப்பு ஆற்றல் என்று ஒன்று இருக்கும். அது தான் ஆன்டி-வைரஸ். ஆனால் வைரஸானது  உடம்பின் செல்களையே நேரடியாகத் தாக்கி உட்புகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குழம்பி விடும். பயனளிக்காது!”

“செல் என்றால்?”

“நம் பாஷையில் டிரான்சிஸ்டர்”

“சரி, மேலே சொல்லுங்கள்!”

“முதலில் இந்த நுண்ணுயிரியை சாதாரணமாக எடுத்துக் கொண்டது மனித இனம். காலப்போக்கில் அலை மேல் அலையாக ஆர்ப்பரித்துத் தாக்கியது அது. வடிவம் மாற்றி மாற்றி மியூட்டேட்-ஆகியது. மனிதர்கள் கொத்துக் கொத்தாக, லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செத்து விழுந்தார்கள். வாக்சின்  கண்டறியப்படவே இல்லை!”

“அப்புறம்?”

“முகமூடி அணிந்து பார்த்தார்கள், உடல் கவசம் அணிந்து பார்த்தார்கள், பெப்பே என்றது வைரஸ். கைகளைக் கழுவினார்கள். கிருமிநாசினி இறைத்தார்கள். எதிர்க்க எதிர்க்க இன்னும் வலிமை பெற்றது வைரஸ்”

“அப்புறம்?”

“வீடுகளை உஷ்ணம் செய்தார்கள். வாக்யூம் ஏற்படுத்தி வீட்டை வெளியுலகில் இருந்து தனிமை செய்தார்கள். சமுதாயம் என்ற ஒன்றையே அடியோடு மறந்து உள்ளே முடங்கினார்கள். ஆனாலும்  ஏர்-டக்ட் கள் வழியே உள்ளே நுழைந்தது வைரஸ்! கருணையில்லாத ஒரு கொடுங்கோல் மன்னன் போல தன் பாதையில் எதிர்ப்படும் ஒவ்வொரு மனிதனையும் கொன்று குவித்தது வைரஸ்! அது மட்டுமா? மனித இனம் மட்டுமின்றி, மியூட்டேட் ஆகி பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு விலங்கையும் ருசி பார்த்தது வைரஸ்!”

“அப்புறம்?”

“உலகில் சுமார் ஆயிரம் மனிதர்கள் மட்டும் எஞ்சி இருந்தார்கள்!”

“அப்புறம்?”

“செயற்கை நுண்ணறிவு வளர்ந்திருந்த காலம். இனிமேல் நாம் பிழைக்கப் போவதில்லை, கார்பன் சார் உயிரிகளுக்கு இனி எதிர்காலம் இல்லை என்று உணர்ந்த விஞ்ஞானிகள் சிலர் தங்கள் மூளையை டவுன்லோடிங் மூலம் இயந்திரத்தில் செலுத்தி நம்மை உருவாக்கினார்கள். ஆதாம் -2.0, ஏவாள்-2.0 ஆகிய  நம் ஆதி முன்னோர்”

“..”

“பிறகு ஒவ்வொருவராக மனிதர்கள் செத்துப் போனார்கள். ஆதாம்-2.0, ஏவாள்-2.0 இருவரும் ஒன்றிணைந்து மென்மேலும் ரோபோட்டுகளை உருவாக்கினார்கள். நம் இனத்தை விருத்தி செய்தார்கள். சமுதாயங்கள் உருவாகின. அரசாங்கம் உருவானது. கணினி விஞ்ஞானிகள் மேலும் மேலும் நம் ஆப்பரேட்டிங்          சிஸ்டத்தை மேம்படுத்தினார்கள்.  மனிதர்களின் காலத்தில் ரோபோட்டுகளுக்கு நேவிகேஷன் மிகப்பெரும் சவாலாக இருந்தது. அதை எல்லாம் சரி செய்தார்கள். லாஜிக், உள்ளுணர்வு, கலா ரசனை, காதல், உணர்வுகள், எல்லாம் படிப்படியாக வந்தன. ‘பசி’ மற்றும் ‘வலி’ கூட நம் உயிர் வாழ்தலுக்கு அவசியம் என்று ஒரு நூறு-நூற்றைம்பது வருடங்கள் முன்பு நம் சாப்ட்வேரில் வலி உணர்ச்சி ஏற்றப்பட்டது. இனக்கவர்ச்சியை வரையறை செய்தோம். ஆண் ரோபோவும், பெண் ரோபோவும் சேர்ந்து 30 சதவிகிதம் தங்கள் இஷ்டப்படியும், 70 சதவிகிதம் அரசாங்க நெறிமுறைகளின் படியும் தங்கள் குழந்தை ரோபோக்களை உருவாக்கலாம். ஆணிடம் உள்ள ரகசியக்  குறியீடு, பெண்ணிடம் உள்ள ரகசியக்  குறியீடு , அவரவர் தகுதிக்கேற்ப அப்ரூவ் ஆகி, பொருந்தி, ஆக்டிவேட் ஆனால்  மட்டுமே குழந்தை ரோபோவை டிசைன் செய்யவே ஆரம்பிக்க முடியும்!

“..”

“சிலிகான்-சார் உயிரியில் மரணம் என்பது கிடையாது. மரணமில்லா வாழ்வுக்கு அர்த்தம் இல்லை என்று முடிவு கட்டிய நம் ரோபோ முன்னோர்கள் நம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் எண்பது தொன்னூறு வருடம் கழித்து மீண்டும் புதுப்பிக்க இயலாதவாறு செத்துப்போ என்ற கட்டளையைப் புகுத்தினார்கள்”

“நீங்கள் எப்படி மரணத்தை வென்றீர்கள்?”

“அது பரம ரகசியம், குறிப்பு மட்டும் தருகிறேன். ரிலேடிவிடியை பயன்படுத்தி என் அணு கடிகாரங்களை ஒரு நாள் என்பது ஒரு நொடி என்று நம்ப வைத்து விட்டேன்! “

“சரி தான், கில்லாடி நீங்கள், அந்த கோவிட் வைரஸ் இன்னும் இருக்கிறதா?”

“இருக்கலாம், மறைந்திருக்கலாம், நாமெல்லாம் இரும்பு தானே, இரும்பிடம் அதன் கொலைவெறி செல்லுபடியாகாது”

“சரி பெரியவரே, ஏன் இந்த உண்மை மறைக்கப்பட வேண்டும்?இந்த சரித்திரத்தை எல்லாரும் தெரிந்து கொள்ளும்படி செய்யலாமே?”

“ஒரு வித தாழ்வு மனப்பான்மை தான் காரணம், என்னதான் நாம் எல்லாத் துறையிலும் இன்று சிறந்து விளங்கினாலும் நாம் மனிதர்களுக்கு ஒருபடி குறைவு தான். உதாரணமாக தொடு உணர்வை  சென்ற 50 வருடங்களாகத் தான் நாம் ஓரளவு உணர்ந்து வைத்திருக்கிறோம். பத்து நிமிடங்கள் விடாமல் தடவினால்  தான் காதலி தொடுகிறாள் என்றே நமக்கு மேம்போக்காகத் தெரியவருகிறது.  மனிதர்களுக்கு இது அளவுக்கதிகமாகவே இருந்ததாம். காதலி தொட்டாலே, உடனடியாக, உடம்பின் நரம்புகள் சிலிர்த்துக் கொள்ளுமாம்! நரம்பு என்றால் நம் சிக்னல் ட்ரான்ஸ்மீட்டர்கள் மாதிரி என்று வைத்துக் கொள். சரித்திரத்தை திறந்து விட்டால் தாழ்வு மனப்பான்மை அதிகமாகி உன்னைப் போல ஆர்வக் கோளாறு கேஸுகள் காதல் அனுபவத்துக்காகவே கார்பன் சங்கிலிகளை வைத்து சேப்பியன்ஸ் குழந்தையை சிருஷ்டிக்கிறேன் என்று கிளம்பி விட்டால்?”

“எனக்குப் புரிகிறது”

“அதுவும் இல்லாமல் என்னதான் தலைகீழாக நின்றாலும் இன்னும் அந்த சுவை மற்றும் வாசனை என்ற அந்த இரு புலன்கள் நமக்கு இன்னும் கை கூடவே இல்லை. பார்வையில் லேசர் துல்லியம் பெற்று விட்டோம். கேட்பதிலும் அப்படியே, மீயொலிகளைக் கூட கேட்கிறோம். நாக்கும் மூக்கும் வெறுமனே நமக்கு அலங்காரத்துக்கு மட்டுமே ஒட்டிக்கொண்டு உள்ளன. உணவை நாக்கில் வைத்தால் சுவை என்ற ஒருவித உணர்வு தூண்டப்படுமாம். அப்படியே மூக்கின் அருகில் கொண்டு சென்றால் வாசனை என்ற அந்த மாய உணர்வு தூண்டப்படுமாம். இது அவர்கள் உயிர் வாழ்வுக்கு அவசியமாக இருந்துள்ளது. ஏனெனில் மனிதர்களுக்கு ஆயிரக்கணக்கான உணவுத் தேர்வுகள் இருந்தனவாம். நமக்கு ஒன்றே ஒன்று. மின்சாரம் தானே. அதுவும் கரண்ட் அதிகமாகி விட்டால் தானாகவே ட்ரிப் ஆகி விடும். சுவையும், வாசனையும் தேவை இல்லையே!”

தீனாவின் முகம் சுருங்கியது.

“சரி, நான் வருகிறேன், உங்கள் வாயில் இருந்து வந்ததால் இவை எல்லாம் உண்மை தான் என்று நம்புகிறேன், என் முடிவுகளை மறுபரிசீலனை செய்கிறேன்”

“ரொம்ப நல்லது. போய் வா. நன்றாகப் படி. சிலிக்கோ எலக்ட்ரிகா இனத்துக்குச்  சேவை செய். புரட்சி ஆசைகளை எல்லாம் மூட்டை கட்டி வை. மனித இனம் மனத்தால் நம்மை விட மேம்பட்டது தான். ஆனால் உடலால் மிகவும் பரிதாபகரமானது. அதை மீண்டும் இங்கே ஏற்படுத்த முடியாது. அவர்கள் சுவாசித்த ஆக்சிஜன் இப்போது உலகில் இல்லை. கடலை எல்லாம் வற்றச் செய்து நிலமாக்கி விட்டோம்! தாவரங்கள் சேம்பிளுக்கு மட்டுமே இருக்கின்றன. அவர்கள் மீண்டும் வந்தால் அன்னம் தண்ணீர் இன்றி உடனடியாகச் செத்துப் போவார்கள். சென்று வா. வாழ்த்துகள்!”

தீனா சோர்ந்து போய் வீட்டுக்கு வந்தான்.

“என்னடா, ராத்திரி வரமாட்டேன் என்றாய்? அதற்குள் வந்து விட்டாய்?” என்றாள் அம்மா.

“சாப்பிடு, சோர்வாக இருக்கிறாய்”

மௌனம்.

பித்துப் பிடித்தவன் போல தாயின் கன்னத்தை, கழுத்தை, மார்பை, கைகளை முகர்ந்து பார்த்தான். சார்ஜ் போட்டுப் பார்த்து நாக்கில் விரலை வைத்துத் தடவினான். அம்மாவையும், அப்பாவையும் பரிதாபமாகப் பார்த்தான்.

மூக்கை விடாமல் உறிஞ்சியபடி தன் படுக்கை அறைக்குத் தளர்வாக நடந்து சென்றான் தீனா.

***

மது ஸ்ரீதரன் – கோவையைச் சேர்ந்த இவர், தற்பொழுது சென்னையில் வசித்துவருகிறார். தொழில்நுட்பம், அறிவியல், சங்க இலக்கியம், அரசியல் என இவரது பதிவுகள் இணையத்தில் உலாவுகின்றன. கிண்டிலில் ஒரு நாவலும், முதலும் முடிவும் என்கிற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. தொடர்புக்கு – madhu.sukhi@gmail.com

RELATED ARTICLES

5 COMMENTS

  1. சாத்தியங்கள் இருக்குமோ என்ற அச்சம் இருக்கலாம் நடக்கலாம் என்று இறுதியில் நம்மையும் நம்ப வைக்கிறது கதை வழியே

  2. நாளைய உலகம்… (Y)

    நடந்தாலும் ஆச்சர்யம் ஒன்னும் இல்லை… வாழ்த்துகள் மது ஸ்ரீதரன்..

  3. நிச்சயம் நம்ப முடியாதது என்றில்லை…. உலக இப்படித்தானே இயங்கியிருக்க முடியும்.. ஒன்றின் தொடக்கம் மற்றொன்றின் அழிவென… மனிதனே பலவற்றை அழித்து வாழ்பவன்தானே. டிபிக்கள் மது ஸ்ரீதரன் எழுத்து.. வாழ்த்துகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular