தமிழ் சிறுவர் இலக்கியம் அறிந்துகொள்ள வேண்டிய ஆளுமைகள்
Yaavarum Publishers
நான் எட்டாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.
என்னுடைய வகுப்பாசிரியர் லண்டன் தேம்ஸ் நதியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நான் குறுக்கிட்டு அந்த நதி எப்படி இருக்கும், அதன் அழகு, அதன் மேலே கட்டப்பட்டிருக்கும் பாலம், பின்னால் இருக்கும் பிக்-பென் கடிகாரம் என்று விவரமாகச் சொல்ல, ஆசிரியருக்கு ஆச்சரியம். “நீ லண்டன் சென்றிருக்கிறாயா?" என்று கேட்க, நான் மஞ்சள் பூ மர்மம் என்ற முத்து காமிக்ஸ் கதையைச் சொல்லி அதில் இருக்கும் ஓவியங்களின் வாயிலாகத்தான் இவ்வளவும் தெரிய வந்தது என்று விளக்கினேன். அதன் பிறகு இன்னொரு முத்து காமிக்ஸ் கதையான "சதிகாரர் சங்கம்" வாயிலாக, இன்று ஒரு நாட்டில் இருந்து பயணத்தைத் தொடங்கி நேற்றைய தினத்தில் இன்னொரு நாட்டிற்கு சென்றடைவதைச் சொன்ன உடனே ஆசிரியருக்கே ஆச்சரியம்.
இப்படியாக காமிக்ஸ் வாசிப்பு என் வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது. இந்தக் காமிக்ஸ் இதழ்களின் பதிப்பாசிரியரான முல்லை தங்கராசன் எனது முதல் ஆதர்ஸமாக மாறினார். ஓவியச் சக்ரவர்த்தி செல்லம் (எ) செல்லப்பன், சிறுவர் இலக்கிய சிந்தனைச் சிற்பி வாண்டுமாமா, அணில் அண்ணா என்று என்னுடைய இளம் பிராயம் மிகச்சிறந்த நினைவுகளுடன் கடக்க பலரும் உதவினர்.
அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா என்று ஆரம்பித்து பின்னர் 1930களில் வந்த இதழ்கள் முதல் 1940களில் ஆரம்பித்த சிறுவர் இதழ்கள், 1950, 60, 70 என்று தொடர்ச்சியாக இதழ்களைச் சேகரித்துப் படிக்க ஆரம்பித்தேன். நம்மிடையே இருந்த மகத்தான ஆளுமைகளை இத்தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தவும் இவர்களின் சாதனைகளை ஆவணப்படுத்தவும் இப்புத்தகம் உதவும் என்றே நம்புகிறேன்.