தலைசிறந்த இந்திய கிராஃபிக் நவல்கள்
Yaavarum Publishers
கிராஃபிக் நாவல்களைப் பற்றிப் பேசும்போது, அமெரிக்க, ஃப்ராங்கோ-பெல்ஜிய, ஐரோப்பிய, ஜப்பானிய கிராஃபிக் நாவல்கள் மட்டும்தானா? இந்தியாவில் நல்ல கிராஃபிக் நாவல்கள் வரவில்லையா? என்ற கேள்வி எழுவதைத் தடுக்கவே இயலாது.
1990களில் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணைக்கட்டு, அதன் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் சூழலியல் பிரச்சனைகளை முன்வைத்து ஒரிஜித் சிங் எழுதிய (இந்தியாவின் முதல் கிராஃபிக் நாவல் என்று சொல்லப்படுகிற) A River of Storiesல் ஆரம்பித்து, 2000களின் பின்பகுதியில் நசீர் அஹமத் படைத்த Kashmir Pending வரையில் பல உலகத்தரம் வாய்ந்த கிராஃபிக் நாவல்கள் இந்தியாவில் வந்துள்ளன. அதேசமயம் இப்போதைய வாசகர்களுக்கு சமகாலத்திய நடையில் இருக்கும் இந்திய கிராஃபிக் நாவல்களைப் படிக்கவே பிடிக்கிறது.
அதனாலேயே, கடந்த பத்தாண்டுகளில் வெளியான 25 கிராஃபிக் நாவல்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தை இப்போது முன்வைக்கிறேன். மாறிவரும் நமது வாசிப்பு சூழலில் கிராஃபிக் நாவல்களைப் பற்றிய ஆர்வம் அதிகரித்து வரும்வேளையில் நமது மண் சார்ந்த இந்த படைப்புகள் முதற்கட்ட ஆர்வத்தை உருவாக்கும் என்று நம்புகிறேன்.
என்னுடைய வழக்கமான பாணியில் ஸ்பாய்லர் இல்லாமல் ஒவ்வொரு கட்டுரையையும் கதை உருவான பின்னணி, உருவாக்கத்தில் இருந்த சுவையான தகவல்கள், இது எதைப் பற்றிய கதை, என்ன ஜான்ர என்று பல விஷயங்களையும், மிகவும் முக்கியமாக ஏன் இந்தக் கதையைப் படிக்க வேண்டும்? என்றும் எழுதி இருக்கிறேன். ஓவியங்களில், வண்ணங்களில், புத்தக அமைப்பில் இருக்கும் அழகியலையும் நான் ரசித்த விஷயங்களையும் தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.