ஆ. அமிர்தராஜ் கவிதைகள்
நமக்குத் தெரிந்த தமிழ் இன்றைய பெருவாரி மக்களின் மொழி அதாவது பெருவாரி மக்களுக்கும் இன்றைய ஆளும் அமைப்புகளுக்கும் ஓர் உடன்பாடு உண்டு. அந்த உடன்பாட்டின் மீது கட்டமைக்கப்பட்ட சமரசத் தமிழ் ஒருவித Hierarchyயைத் தொடர்ந்து உற்பத்தி செய்யும் கேந்திரம். இன்றைய கவித்துவ நுட்பப் பிரக்ஞை அதனை ஏற்க முடியாது அதிலும் கவிஞராக இருப்பவர்களின் அறிவார்ந்த வேகமும் கவித்துவ உலகப் பார்வையும் இந்த சமரசத்திற்கு இயல்பாகவே எதிரானது. அதனால்தான் அமிர்தராஜிடம் மிகவும் முதிர்ச்சியடைந்து வெளிப்படும் கவித்துவம் தமிழுக்கு மாற்றுத் தமிழைச் சிருஷ்டிப்பதாய் மாறுகிறது.
- தமிழவன்
இந்தக் கவிதைகளினூடாகச் செல்கையில் மிக அந்தரங்கமான கவிதைகள் அளிக்கும் ஒரு படிமம் என்னுள் வருகிறது. திரும்பத்திரும்ப வெட்டவெளியை அளைவதுபோல அசைந்துகொண்டே இருக்கும் இலை ஒன்று அல்லது அது எதையோ உச்சரித்துக்கொண்டே இருக்கும் நாக்கா? இருத்தலின் எடை வேறொன்றைப் பற்றிக்கொண்டு சற்று விலகிக்கொண்டு இருத்தலின்மையை உணரும் நகர்வு என இக்கவிதைகள் அசைந்து கொண்டே இருக்கின்றன . ஆ. அமிர்தராஜின் இக்கவிதைகள் அகம் சார்ந்த உருவகங்களை வெளியே இயற்கையில் கண்டடையும் நவீனக்கவிதையின் அழகியலை உறுதியாகப் பற்றிக்கொண்டவை.
-ஜெயமோகன்