கிளை நதி
Yaavarum Publishers
நவீன இலக்கியவாதிகள் இறுகிய முகமுடையவர்கள். அவர்களுக்கு அவ்வளவாக சிரிக்கத்தெரியாது. அறிந்துகொள்ள கடினமான விஷயங்களைக் குறித்து, புரிந்துகொள்ள சிரமமான மொழியில், திருகலான நடையில் எழுதுபவர்கள் என்கிற பொதுப்புத்தி சார்ந்த அபிப்பிராயங்களுக்கு நேரெதிரான வகையில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு வாசகன் தன் உள்ளத்தை திறந்து காணக்கூடிய ஒரு வரியை எழுதுவதற்காக, ஓர் எழுத்தாளன் தன்னை தயாரித்துக்கொள்ள எவ்வளவு பிரயாசைப்பட வேண்டியிருக்கிறது என்பதை அறிய இவை உதவும். இவற்றில் தான் பழகி அறிந்த ஆளுமைகள், படித்த நூல்கள், பார்த்த திரைப்படங்கள், பாதித்த சமூக வரலாற்றுத் தருணங்கள் எல்லாவற்றைப் பற்றியும் இளங்கோ தனது பார்வையை சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் முன் வைத்திருக்கிறார். முக்கால் பக்கத்திலிருந்து மூன்றுக்கும் அதிகமான பக்கங்கள் வரை நீளும் இந்த கட்டுரைகளில் விமர்சனம், வேடிக்கை, விஷய ஞானம், வெகுளி என எல்லாமும் அடங்கியுள்ளன. முகநூலில் அவ்வப்போதைய மனநிலைக்குத் தக, உடனடி வாசிப்பிற்காக எழுதப்பட்டவை என்பதால் இக்கட்டுரைகள் வாசகர்களை வெருட்டாதவொரு சரளமான நடையில் அமைந்திருக்கின்றன. அளவில் சிறியவை எனினும் ஆர்வமுடைய வாசகனுக்கு இவை ஒவ்வொன்றும் ஒரு ஊடுவழி போன்றவை. பிடித்த பாதையில் உள்நுழைந்து மேலும் தேடிப்போவானெனில் அது ஆயுளுக்குமானதொரு பயணமாக நீளவும் கூடும். - க.மோகனரங்கன்