உலகச் சிந்தனையில் கிளை பரப்பிய ஒரு மரம்
Yaavarum Publishers
ஒரு மனிதன் தனது சொந்த ஊரை நினைவின் வழியே தேடும்போது, அது ஒரு புவியியல் பயணம் மட்டுமே. ஆனால், தமிழவனின் தன் வரலாறு அவரை ஓர் எழுத்தாளனாக, ஒரு மொழியுணர்வாளனாக, கலை இலக்கியத்தின் மீது கொண்ட ஓர் உலகப்பார்வையாளனாகக் காட்டுகிறது. அதற்கும் மேல் வாழ்ந்த வாழ்க்கையின் ஆழ்ந்த சாட்சியமாக இதனை அவர் எழுதும்போது இந்த நினைவு மீட்டல் புலன் கடந்த சிந்தனையின் அடுக்குகள் வழியாகச் செல்லும் அகப் பயணமாகிறது.
அரசியல், மதம், கோட்பாடு, மொழி, தேசியம், ஊர், மண்வாசனை, நம்பிக்கை, நினைவுகள் என இவை அனைத்தும் இங்கே ஒரு மரத்தின் கிளைகளாக விரிகின்றன.
இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் அன்று கல்லூரி மாணவனாக கலந்துகொண்டபோது தமிழவனிடம் ஏற்பட்ட வாழ்க்கைத்தேடல் பின்னர் அவரை அகில உலக சிந்தனைகளைத் தமிழோடு சேர்த்து அறியும் பயணத்தில் வைக்கிறது. மார்க்சியம், திராவிடம், தொல்காப்பியம், லெவி ஸ்ட்ராஸ், என உலகத் தத்துவங்களையும் தான் பிறந்த பகுதியின் நாகரிகத்தையும் துருவிப்பார்க்கிறார்.
அவருடைய தமிழ் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் வழி இப்பயணம் ஜம்பதுக்குக்கும் அதிகம் ஆண்டுகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து தமிழில் எழுதியும் அறிவுத்தளத்தில் சர்ச்சைகளில் பங்கெடுத்தும் வந்துள்ளார். போலந்து, அர்ஜென்டினா, பாரிஸ், ஜெர்மனி எனக் கருத்தரங்குகளில் இவரின் கருத்துகள் விவாதிக்கப்பட்டுள்ளன.
தமிழவன், காலத்தையும் நிலவெளியையும் கடந்து, உலக இலக்கியத்தின் வேர்களோடு தமிழ்ச் சிந்தனையின் கிளைகளைப் பொருத்துகிறார். அவரது எழுத்து நினைவுக்கும் வரலாற்றுக்கும் இடையே நடக்கும் ஓர் அமைதியான தத்துவப் பேச்சாகும்.
தனிப்பட்ட அனுபவம் எவ்வாறு பொதுவான உண்மையாய் மாறுகிறது என்பதைச் சாட்சியமாக்கும் சுயவரலாறு.
தமிழவனின் எழுத்து இங்குத் தனிப்பட்ட நினைவுகளைக் கடந்து சென்று, மனித அனுபவத்தின் பரவலான உண்மையைத் தொட்டுவிடுகிறது.
உலக சிந்தனையில் கிளை பரப்பிய ஒரு மரம் தமிழ்ச் சிந்தனையின் வேர்களையும் உலக இலக்கியத்தின் கிளைகளையும் இணைக்கும் ஒரு முக்கிய ஆவணம்.